தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கடிதம்.
விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால் வரும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மீனவர்கள் அறிவிப்பு!!
மீனவர்களுக்கு தீர்வு:
சிறப்பு பார்வையில்!
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களது எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு-புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்ற நிலையில் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைநகர் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் ஆறு மீனவர்கள் கைதுசெய்யப்படடிருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களும் விசாரணைக்கு பின்னர் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர்களால் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இது குறித்த வழக்கிளை விசாரித்த பதில் நீதிபதி ஷாலினி மீனவர்கள் ஆறு பேரையும் வரும் 28 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேவேளை, கடந்த இரு வேறு சந்தர்பங்களில் தமிழகத்தை சேர்ந்த 46 மீனவர்கள் ஏழு படகுகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ளனர்.
மன்னாரில் எட்டு பேர் கைது:
கச்சதீவு கடற்பகுதியில் வைத்து கடந்த டிசம்பர் 6ம் தேதி இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரும் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் அடுத்தநாள்(07) வியாழக்கிழமை முன்னிருத்தப்பட்டு வரும் 20ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவில் 13 பேர் கைது:
இதேபோன்று நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 6ம் தேதி மூன்று படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்கள் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊற்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதவான் திருமதி சரோஜினிதேவி இளங்கோவன் அவர்களது யாழ்ப்பாண இல்லத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த 13 மீனவர்களையும் எதிர்வரும் 21ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை கடலில் 25 பேர் கைது:
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 10ம் தேதி கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து மறுநாள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 22 ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏழு படகுகளுடன் கைதான 46 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களும் வரும்
28ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


