சென்னைக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் ராஜ்நாத் சிங் உறுதி!
புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
மிஜ்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன்பின்னர் மத்திய அமைச்சருக்கு புயல் பாதிப்பு குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் வீடியோ காட்சி மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
சென்னைக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்;
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது: நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன். சென்னை மீண்டு வர தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் வர உள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் புத்தங்களை கொடுத்து வரவேற்றார்.
