நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 22-ம்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பல்வேறு முக்கிய அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
குறிப்பாக, மூன்றி குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள் உள்பட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
அத்துடன் 2023-24-ம் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு ஆகியவற்றையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
எனவே இந்த தொடரை சுமுகமாக நடத்த அரசு விரும்புகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நடத்திய இந்த கூட்டத்தில், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய், பிரமோத் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவுசியா கான், புரட்சிகர சோசலிஷ்ட் கட்சி தலைவர் பிறேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும், மூன்று குற்றவியல் மசோதாக்களுக்கு ஆங்கில பெயரை சூட்ட கோரிக்கை வைத்தனர். மேலும், விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல், மணிப்பூர் விவகாரம் குறித்தும் போன்ற பிரச்சினைகளையும் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்துக்குப்பின் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது;
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் மற்றும் 2 நிதித்துறை அலுவல்களை மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவையை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ள பரிந்துரைகளை அரசு நேர்மறையாக எடுத்துள்ளது.
அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு உறுதியாக இருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கபூர்வமான விவாதத்துக்கு அரசு முழுமையாக தயாராக உள்ளது. அதேநேரம் விவாதம் நடத்துவதற்கு ஏற்ற சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டும். அவையை சுமுகமாக நடத்த அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.யும், மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் பேசும்போது,
நமது நிலத்தை சீனா ஆக்கிரமிக்கும் விவகாரம், மணிப்பூர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கவலையை அரசுக்கு தெரிவித்து உள்ளோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
