கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ஒரு படகு சேதமடைந்துள்ளதாகவும் அதில் இருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை காலை இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இவ்வாறு சென்ற மீனவர்கள் நேற்று சுமார் மாலை 5 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் - கச்சதீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை ரோந்து கப்பல் படகுகளை நாளா புறமும் விரட்டி அடித்ததாகவும், இதன்போது இராமேஸ்வரத்தைச் சேர்ந்த பவுல் என்பவரின் படகை அதிவேகமாக நடுக்கடலில் மோதியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த படகில் இருந்த நான்கு மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் படகின் முன்புறம் பலத்த சேதத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என இரவோடு இரவாக மீன் பிடிக்காமல் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
இச்சம்பவத்தை அடுத்து மீன்பிடிக்கச் சென்ற ஏனைய மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு, மீன்பிடிக்காமலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பியுள்ளனர்.
இதனால் படகு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நாகபட்டினத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
