பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய போது அமராவதி ஆற்றில் குளித்த 3 பேர் உயிரிழந்த சோகம்.
பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு ஈஷா மையத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது அமராவதி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.
பொங்கல் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திக்கு 20 பேர் சென்றுள்ளனர். அதில் விடுமுறையை கழித்து ஆலங்குளம் திரும்பிய போது 3 பேர் தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள அமராவதி ஆற்றில் அபாய பலகை இருப்பதை உணராமல் குளித்துள்ளனர்.
அப்போது சின்ன கருப்பு (வயது 31) பாக்கியராஜ் (வயது 39) ஹரி (வயது 16) ஆகிய மூன்று பேரும் நிலை தடுமாறி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் மூழ்கிய மூவரையும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு ஆகிய இருவரும் தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். ஹரி என்பவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆவார்.
ஆற்றில் குளித்த போது மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


