தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நெடுஞ்சாலை அருகே "பங்கய மலராள் கேழ்வன்…’ என்று தொடங்கும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 790 ஆண்டுகள் பழமையான கிணற்றுடன் கூடிய, மங்கலச் சொற்களுடன் பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பகுதியைச் சேர்ந்த பி.ராஜேஷ் என்பவர் அளித்த தகவலின் பெயரில், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் தவசிமுத்து மாறன், கிணற்றையும், அதில் உள்ள எழுத்துக்களையும் படியெடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்போது அதிலுள்ள விவரங்கள் குறித்து அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில், பண்டைய காலத்தில் நிலவி வந்த பல்வேறு வணிகக் குழுக்களின் பெயர்கள் காணப்படுகின்றன.இவற்றில் நானாதேசி என்போர், எல்லா நாடுகளுக்கும் கடல் வழி மற்றும் தரைவழியாகச் சென்று வணிகம் செய்தவர்களாகவும், திசையாயிரம் என்போர் எல்லாத் திசைகளுக்கும் சென்று வணிகம் செய்வோராகவும் வாழ்ந்துள்ளனர்.
இத்தகைய வணிக குழுவினர், தங்களுக்கென பாதுகாப்பு வீரர்களையும் கொண்டிருந்தனர்.
மேலும், பிராமணர்களுக்கு தானமாக ஒரு ஊரினை மங்கலம் என்ற பெயரில் உருவாக்கி கொடுத்து, அதன் காவல் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு உள்ளதையும் அறிய முடிகிறது.
இக்குறிப்பிட்ட கமலைக் கிணற்றின் கீழ்பகுதியில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) கி.பி.1234-இல் உள்ள 20 வரிகளைக் கொண்டுள்ளது.
அதன் முன்பு 7 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது.இந்த ஊர் நானாதேசி நல்லூர் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடும் விதத்தில், தாமரைப்பூவில் வாசம் செய்யும் லட்சுமியின் மணாளன் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், மென் பாதராமன் சிவந்த சூரியனாக ஒளிவிடும் ராசன் நானாதேசி நல்லூரின் அரசன் ஆண்டு, 1234ல் கங்கை நீர் போல வற்றாத கிணற்றை அமைத்திட உலகம் போற்ற உத்தரவிட்டான்.
என்றென்றும் மக்களுக்கு தண்ணீர் தருவதை இனிமையான தமிழால் கூறு என்ற பொருள்பட, இக்கல்வெட்டு அமைந்துள்ளது. கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு, துலாக்கல் அல்லது ஏற்றம் என்று அழைக்கப்படுகிறது. மக்களுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில், கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம்.இத்தகைய கிணறுகளை நடைமுறையில் அப்பகுதிகளின் அரசனும், அவரது சார்பில் நிர்வாகிகளும், வணிகர்களும் உருவாக்குவது வழக்கத்தில் இருந்துள்ளது.
கோயில் அருகில் வெட்டப்பட்டு உள்ளவை, திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.
அரசன், கமலைக் கிணற்றையும் அமைத்து கொடுத்துள்ளார். இக்கிணறு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இக்கிணறும், இதில் உள்ள சிறப்பு மிக்க கல்வெட்டும் தேடுவாரில்லாமல் உள்ளது. இதனை வெளிக் கொணர்ந்தால், பாடலுடன் உள்ள இக்கிணற்று கல்வெட்டைப் பார்ப்பதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது அந்த இடத்தில் ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே சுகாதாரக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருக்கும் அந்த கிணற்றின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதுடன், தமிழக தொல்லியல் துறை சிறப்புமிக்க அந்த கல்வெட்டைச் சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பது, அந்த ஊருக்கு பெருமை தரும் எனக் கூறினார்.
அந்த கல்வெட்டில் உள்ள தகவல்கள் பின்வருமாறு: இடம்: தூத்துக்குடி மடத்தூர் (பைபாஸ் அருகே), காலம் - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1234கல்வெட்டுச் செய்தி: இவ்வூரின் பழைய பெயர் நானாதேசி நல்லூர் ஆகும். இப்பெயர் மருவி, தற்போது மடத்தூர் என ஆகிவிட்டது.
கமலைக் கிணற்றில், இதன் கீழ்ப்பகுதியில் கல்வெட்டு 20 வரிகளைக் கொண்டுள்ளது. கல்லின் அளவு 7 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. அதில் உள்ள விவரங்களாவன;
பங்கய மலராள்,
கேழ்வன் தயலை,மன்பாத ராமன்ங்கதிர், ராசனானாதே,
சிநல்லூர் வாழ்,
செம்மல் சங்கையில், சகரையாண்டாயிரத்தொரு நூற்றைம்ப[த்]தாற் கங்கை நீரென்னத் தண்ணீற் கேணியைக் கண்டிட்டானே தெண்ணருலகமிண்ணத்
தேசிநல்லூற்றணற்றுரவு சமைப்பித்தான் மண்ணோ ரருந்து பரந்தாரு மிராசன் தயிலத்தரும் பாகன்
தண்டமிழோர்தாய் என அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

