மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பால்வளத் துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ள நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சூரிய அஸ்தமன (Sunset Point) பகுதியில் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற தலைப்பில் Health Walk திட்டமானது வெகுவிரைவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட உள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் Health Walk சாலை ஒன்று உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 38 வருவாய் மாவட்டங்களில் Health Walk சாலைக்கான இடம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு துறையின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் , சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர்மகேஷ், மாவட்ட வன அலுவலர் இளையராஜா , மாநகராட்சி ஆணையர் மோகன் ஆனந்த் ஆகியோர் இந்நடைபயிற்சியில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், நடைபயிற்சி சங்கத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மிகவும் சிறப்பானதாகும். இத்திட்டத்தை பொருத்தவரை 8 கிலோமீட்டர் தூரத்திற்கு இடம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாதையின் இரு புறங்களிலும் மரங்கள் நடுவது, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் இருக்கைகள் அமைப்பது, அதோடுமட்டுமல்லாமல், நடப்பதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஆங்காங்கே நிறுவுவது, ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும், தூர பலகைகளும் நிறுவப்பட உள்ளது.
ஒரு மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யப்படும் இடத்தினை கடந்து செல்பவர்கள் நாமும் நடக்க வேண்டும் என்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சாலையினை பொருத்தவரை ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறையை சேர்ந்த அலுவலர்கள் ஹெல்த் கேம்ப் ஒன்றை நடத்துவார்கள். இம்முகாமில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் கண்டறியப்படும். மேலும் இம்முகாமில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குடிநீர், வாழைப்பழம் போன்றவைகளும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான திட்டமிடலை மாவட்ட நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து மேற்கொள்ள உள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து விரைவில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக 38 மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் .ஆனந்த் மோகன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர்.குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.