திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆசிரியர்; ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் ! சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!!

sen reporter
0

திருச்செந்தூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறை சேர்ந்த தங்கபெருமாள் மகன் சதீஷ் (33). 

இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.


ஆசிரியர் சதீஷிற்கு திருமணமாகி 6 மாத ஆண்குழந்தை உள்ளது. வழக்கமாக பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வருவார்.


இந்நிலையில் திங்கள்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். மாலையில் பள்ளி முடிந்து பரமன்குறிச்சி வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 


இந்நிலையில் நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் வந்தபோது, மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய சதீஷ் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். 


இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


பாளை.அரசு மருத்துவமனையில் சதீஷை பரிசோதித்த டாக்டர்கள், விபத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. 


இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top