இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றும் ஒரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.
மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர்.
எம்.பி.க்கள் அமர்ந்திருந்த சேர் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்தனர். அதில் இருந்து வாயு வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றமே பரபரப்பானது. மக்களவை உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.
2 பேரும் உள்ளே நுழைந்தது எப்படி?
மக்களவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "பார்வையாளர் பகுதியில் இருந்து 2 இளைஞர்கள் திடீரென குதித்து உள்ளே வந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றை வீசினர். அதில் இருந்து வாயு வெளியேறியது.
அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அத்துமீறலாகும், ஏனென்றால் 2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட நாடாமன்றத் தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
சு.வெங்கடேசன் விளக்கம்;
இதுகுறித்து பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து முதலில் ஒருவர் தாவினார். அவர் தவறி விழுந்துவிட்டதாகதான் முதலில் நினைத்தோம். ஆனால், அவர் எழுந்து வேகமாக நாற்காலிகளுக்கு நடுவில் ஏறி குதித்து ஓடினார். மற்றொரு நபர் அவையில் குதித்த பிறகுதான், இரண்டு பேர் குதித்து உள்ளே வந்திருக்கின்றனர் என்பது புரிந்தது. அவர்களை பிடிப்பதற்கு முன்பாக ஷூவில் இருந்து கேஸை எடுத்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அவையில் காவலர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் அச்சத்தில்தான் இருந்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு காவலர்கள் உள்ளே வந்தனர். இது முழுக்க பாதுகாப்பு குறைபாடுதான்" என்றார்.
உள்ளே குதித்த நபர்கள் கோஷம் எழுப்பினர் என்றும் உள்ளே நடந்த களேபரத்தில் அவை தமக்கு சரியாக கேட்கவில்லை என்றும்
சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
கைதானவர்கள் யார்?
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்.
அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான பெண்களில் ஒருவர் பெயர் நீலம் (42 வயது) மற்றும் இன்னொருவர் பெயர் அமோல் ஷிண்டே (25 வயது) என தெரியவந்துள்ளது.
‘சர்வதிகாரம் கூடாது’ என மக்களவைக்குள் நுழைந்த இருவரும் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் 22வது நினைவு தினம்:
2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் நடந்து 22வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்த 9 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் இந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த தாக்குதலில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். என்பது குறிப்பிடத்தக்க மறக்கமுடியாத நிகழ்வாகும்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடந்துவருகிறது
