மக்களவையில் இருவர் அத்துமீறிய சம்பவம் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறது.
தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வழக்கம்போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின.
மக்களவையில் மதியம் பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென எம்பிக்களின் இருக்கையின் மீது இளைஞர் ஒருவர் குதித்திருக்கிறார். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து யாரோ தவறி விழுந்துவிட்டார்கள் என்றுதான் பலரும் நினைத்துக்
கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு சில விநாடிகளில் இளம் பெண் ஒருவரும் இதேபோல எம்பிக்களின் சீட் மீது குதித்திருக்கிறார். அப்போதுதான் எம்பிக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே உடனடியாக அவர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர்.
கீழே குதித்தவர்கள் தங்கள் ஷுக்களிலிருந்து மர்ம பொருள் ஒன்றைய வெளியில் எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியுள்ளது. இது லைட்டான மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர்களை நாடாளுமன்ற காவல்துறையினரும், எம்பிக்களும் பிடித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவையினுள் இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே, வண்ண புகை வீசும் பட்டாசு போன்ற பொருளை கொண்டு இருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சமே பாதுகாப்பு என்றுதான் சொல்லப்பட்டது. அப்படி இருக்கையில், இது போன்ற அத்துமீறல் எப்படி நடந்தது? என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மறு ஆய்வு செய்யக் கோரியும், தீவிர கண்காணிப்பையும், பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இன்று மக்களவையில் இருவர் அத்துமீறிய சம்பவம் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
