மிக்ஜாம் புயல்,மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்:
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு முழு விவரம்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் மக்கள் எதிர்கொண்டனர். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவித்தொகைகளை அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் வீசிய `மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கெனத் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8-12-2023 வரை, மூன்று வேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டிருகின்றன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு அரசு அறிக்கை
தமிழ்நாடு அரசு அறிக்கை
மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருல்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டுவருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:
பால் பவுடர் - 58,222 கிலோ.
குடிநீர் பாட்டில்கள் - 9,67,000 எண்ணிக்கை.
பிரெட் பாக்கெட் - 2,65,000 எண்ணிக்கை.
பிஸ்கட் பாக்கெட் - 10,38,175 எண்ணிக்கை.
இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அறிக்கை
தமிழ்நாடு அரசு அறிக்கை
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குகு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்;
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாகச் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாகச் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7.5 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும்
சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
