திருப்பூர் மாவட்டத்தில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அம்மா சிரமப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் டிரான்ஸ்பர் கேட்டு இரட்டை சிறுமிகள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரம் பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வின் போது சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த கவிதன் - செல்வசுயம்பு தம்பதியரின் இரட்டை மகள்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்திருந்தனர்.
மனுவில், எனது தந்தை கவிதன் சாத்தான்குளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது தாய் செல்வசுயம்பு திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2009ம் ஆண்டு மாநில சீனியாரிட்டி அடிப்படையில் திருப்பூரில் ஆசிரியராக வேலை கிடைத்தது. இந்த நிலையில் அவர் பணிக்கு சேர்ந்த நாளிலிருந்து தற்போது வரை 14 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் எனவும், தந்தை கவிதன் சாத்தான்குளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் தனது தந்தை ஒரு புறத்திலும், தாய் ஒரு புறத்திலும் வேலை பார்த்து வருவதால் தாங்கள் இருவரும் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும், எனவே தனது தாய் செல்வசுயம்புவுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கொடுக்குமாறு அந்த இரட்டை சிறுமிகள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இடம் மனு கொடுத்தனர்.
அப்போது இரட்டை சிறுமிகள் அங்கிள்.. எங்க அம்மாவுக்கு டிரான்ஸ்பர் வாங்க தாங்க..என மழலை குரலில் வலியுறுத்தினர்.
மனுவை வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறுமிகள் என்னவென்று பேசி டிரான்ஸ்பர் வாங்கி தருவதற்கு உடனே ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
சாத்தான்குளம் அருகே தனது தாய்க்கு டிரான்ஸ்பர் கேட்டு மனு கொடுத்த இரட்டை சிறுமிகளை அங்கிருந்தவர்கள் வியப்பாக பார்த்தனர்.
.jpg)