காரைக்குடியில் சிரித்த முகத்தோடு ரசிகர் ஒருவர் கொடுத்த சால்வையை நடிகர் சிவகுமார் தூக்கி எறிந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சம்பவத்திற்கு நடிகர் சிவகுமார் இப்போது மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.காரைக்குடியில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அவருக்கு முதியவர் ஒருவர் சிரித்த முகத்தோடு சால்வை கொடுக்க வந்தார். ஆனால், அதை வெறுப்புடன் சிவகுமார் விசிறி எறிந்தார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதற்கு முன்பு தன்னோடு செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்ட விவகாரமும் இப்படித்தான் பூதாகரமானது. அதைத் தொடர்ந்து, இப்போது சால்வை விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆனால், சால்வை கொடுத்தவர் சிவகுமாரின் நண்பர் கரீம் எனவும் உரிமையுடனேயே அவர் கொடுத்த சால்வையை சிவகுமார் மறுத்தார் எனவும் சொல்லப்பட்டது.
இதுகுறித்து நடிகர் சிவகுமார் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் தன் நண்பர் கரீமுடன் பேசியிருக்கும் அவர், காரைக்குடி சால்வை விவகாரத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இவர் யாரோ எவரோ கிடையாது. என் தம்பி இவர். எனது 50 ஆண்டு கால நண்பர்.
என்னுடைய திருமணத்தில் பல வேலைகளை முன்னிருந்து செய்தவர். இவருடைய திருமணத்தையும் நான் தான் செய்து வைத்தேன்.
பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை போர்த்த வந்தால் அவர்களுக்கே திரும்ப போர்த்தி விடுவேன். எனக்கு சால்வை போர்த்தும் பழக்கம் இல்லை. நிகழ்ச்சி முடிய பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டது.
சோர்வுடன் இருந்தபோதுதான் கரீம் எனக்கு சால்வை போர்த்துவது பிடிக்காது எனத் தெரிந்துமே சால்வையுடன் நின்றிருந்தார்.
தெரிந்தே சால்வையுடன் நின்றிருந்தது அவர் தப்பு என்றால், அதை பொது இடத்தில் வாங்கி கீழே எறிந்ததும் என் தப்பு தான். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
