திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட யுபிஎஸ் பேட்டரிகள் கைதான ஒப்பந்த ஊழியர்கள்!!!

sen reporter
0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக மகப்பேறுக்காக வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன் காரணமாக இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அந்த வகையில் மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டால் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 40 யுபிஎஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 40 யுபிஎஸ்களில் 27 யுபிஎஸ்களின் பேட்டரிகள் திடீரென காணாமல் போகின. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை பணியாளர்கள் தலைமை மருத்துவரிடம் இது குறித்து கூறினர். இதையடுத்து தலைமை மருத்துவர் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார், “4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 யுபிஎஸ்களின் பேட்டரிகள் திருடு போனதாக” மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதரங்களை ஆராய்ந்த போலீசார் 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் மோகன், சுந்தர், வீரமணி ஆகிய மூன்று பேர் தான் பேட்டரிகளை திருடியதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 27 யுபிஎஸ் பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் யுபிஎஸ் பேட்டரிகள் காணாமல் போன போது மின்திடை ஏற்பட்டதாகவும், அதனால் மகப்பேறு பிரிவில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அவதிக்குள்ளானதாகவும் சர்ச்சை எழுந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இதுகுறித்து இன்று விளக்கம் அளித்தார்.அப்போது பேசிய அவர், “பேட்டரிகள் காணாமல் போனதால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரப்பிரிவு இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 24 நேரத்தில் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று பேரும் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top