வேலூர்:தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு கூட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் கோரிக்கை!!!
3/03/2026
0
வேலூரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக 2026 சட்டமன்ற தேர்தலில் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கிராமப்புற பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெற தேர்தல் அறிக்கை இடம்பெறக் கோரி மனு அளித்தார். அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது: 1978-79ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு 11 மற்றும் 12ஆம் வகுப்பில் நடைமுறையில் இருந்த பாடங்கள் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியேற்பட்டால் அவை நிரப்பப் படாமல் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதால் மெல்ல கற்கும் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பினை மறுக்கும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு முறைக்கு மேல் தோல்வி அடைந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொதுப்பாட பிரிவுகளிலே அறிவியல் பிரிவிலோ அல்லது கலைப் பிரிவிலோ சேர்க்கப்படுவதில்லை. இதனால் இந்த மாணவர்கள் உயர் கல்வி பெற இயலாத சூழல் ஏற்படுகின்றது. மேலும் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர வேண்டும் என்று சொன்னால் அவர்கள் வெகு தொலைவுக்கு சென்று கல்வி பெறவேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு தொழிற்கல்விப் பாடத்தையாவது கட்டாய பாடமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். மேலும் மூன்று முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 128 ஆசிரியர்கள் அனைவருக்கும் தொழிற்கல்வி ஆசிரியராக பணி வரன்முறை செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு செ. நா. ஜனார்த்தனன் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
