வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வு பொது சுகாதார பிரச்சாரம் ஒன்று, 2026 ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் வேலூர் வளாகத்தில் நடைபெற்றது. இதை வேலூர் மாநகராட்சியின் நகர சுகாதார அலுவலர் டாக்டர் பி. பிரதாப் குமார் 20-ம் தேதி தொடங்கி வைத்தார். வெப்பம் தொடர்பான நோய்களைக் குறைப்பதற்கான முதன்மை முயற்சியாக, நோய்த்தடுப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கும், அதற்கான செயல்முறை திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஒரு பணிக்குழுவை அமைக்கும் முயற்சியையும் அவர் பாராட்டினார். மேலும், ஆரம்ப சுகாதார மையங்கள் உட்பட அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார். கடந்த ஆண்டு போக்குவரத்து சிக்னல்களுக்கு அருகில் பசுமை வலைக் கூரைகளை அமைப்பதில் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்ட சி எம் சி நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.துணை இயக்குநர் டாக்டர் பென்னி பால் வில்சன், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ. ராஜேஷ், செவிலியர் கண்காணிப்பாளர் ஆலிஸ் சோனி மற்றும் பொதுக்கண்காணிப்பாளர் ரேனி சார்லஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தத் தொடக்க விழாவில் தங்கள்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, குறிப்பாக மருத்துவமனை வளாகத்தில் வெப்பத்தைத் தணிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குத் தங்கள் ஆதரவையும் வழங்கினர். துணைப் பொதுக் கண்காணிப்பாளர் சோனியா வலஸ் ஏற்பாடு செய்திருந்த சுவரொட்டி, ஸ்லோகன் மற்றும் காணொளிப் போட்டிகளில் பல ஊழியர்கள் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றனர்.இந்த விழிப்புணர்வுத் திட்டமானது, நோயாளிகள், பராமரிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பன்மொழித் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொம்மலாட்டங்கள் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம், உண்ணவும், பருகவும் உகந்தவை (பழங்கள், பழச்சாறுகள், நிறைய தண்ணீர் மற்றும் ORS), அணிய வேண்டிய உடை (இளம் நிறப் பருத்தி ஆடைகள்), குடை அல்லது தொப்பி பயன்படுத்துதல், உடலை நீரேற்றத்துடன் வைத்திருத்தல் மற்றும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலைத் தவிர்த்தல் போன்றவை குறித்த அறிவை வழங்குவதையும், தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ் அவர்களால் HRI பணிக்குழு உருவாக்கப்பட்டது. இதற்கு மருத்துவ மற்றும் நோய்த்தணிப்பு மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ஜெனிஃபர் ஜெபா.எஸ், இணைப் பொது கண்காணிப்பாளர் ஆனந்த் சாமுவேல் மற்றும் மூத்த HICC அதிகாரி டாக்டர் ஹேமா பால் ஆகியோர் தலைமை தாங்கினர். நோயாளிகள், பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களிடையே HRI-ஐத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்தப் பணிக்குழு உறுதியாக உள்ளது.
வேலூர்:சிஎம்சி வளாகத்தில் 2 நாட்கள் நடந்த வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வு சுகாதார பிரசாரம்!!!
4/21/2026
0
