தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களை தேசிய பேரிடராக அறிவிக்கலாம் என வைகோ கருத்து தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த 2015ம் ஆண்டு மழை வெள்ளம் தாக்கிய போது, அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆனால், இந்த முறை வரலாறு காணாத மழை பெய்த போதும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் முன் கூட்டியே திட்டமிட்டு, தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளது.
இரண்டாவது முறையாக, தென் மாவட்டங்களை மழை வெள்ளம் தாக்கியதில் ஏராளமான குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் நிற்கின்றனர்.
இதனைச் சரி செய்வதற்காக மாநில அரசுக்கு உள்ள சக்திகளை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர்.தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கேட்ட நிதியைக் கொடுக்கவில்லை. ஆனால், பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் அவர்களின் தேவைக்கு அதிகமாகவே நிதியைத் தருகிறார்கள்.
ஒரு கண்ணிலே வெண்ணெய்யும் பாஜக அல்லாத மாநிலங்களில் சுண்ணாம்பைக் கண்ணில் வைப்பது போல பத்தில் ஒரு பங்கைத் தருகிறார்கள்.
பிரதமரைப் போற போக்கில் பார்த்துச் செல்வதாக மத்திய அமைச்சர் ஒருவர் நம்முடைய முதலமைச்சரைச் சொல்லி இருக்கிறார். போகிற போக்கில் பார்க்கப் பிரதமர் என்ன வழிப்போக்கரா?
மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் போது, நிவாரணத்திற்காகப் பிரதமரைச் சந்திக்கச் சென்ற தமிழக முதலமைச்சரின் காலை நேரத்தை மாற்றி, இரவு சந்திக்கலாம் என்று சொல்வது பிரதமரின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார். தமிழக அரசு மக்களுடைய கஷ்ட நஷ்டங்களை போக்குவதற்கான முயற்சிகளில் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது. மின்சாரம் பழுதுபட்ட பல இடங்களில் எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது.
தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு என்பதால் தமிழக அரசு திட்டமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த கேள்விக்கு, அந்தந்த மாநிலங்களில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களை பேரிடராக அறிவிக்கலாம்.
146எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது தான் முதல் முறை ஒன்றிய மோடி அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்திருக்கிறது என தெரிவித்தார்.