தஞ்சாவூர் அருகே கார்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து முதல் அமைச்சர் அறிவித்துள்ள தலா 2 லட்சம் ரூபாய்க்கான நிவாரண நிதி காசோலைகளை தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், 3ம் மைல் பகுதியிலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் கடந்த 20ம் தேதியன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (வயது 62) த/பெ.யாகப்பதேவர், ஞானம்மாள்(வயது 60) க/பெ.அந்தோணி, ராணி (வயது 40) க/பெ. மாசாணம் மற்றும் சின்னபாண்டி (வயது 40) த/பெ.முருகையா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும்,
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி,
தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் விபத்தில் உயிரிழந்த நால்வரின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் காசோலையினை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
