சென்னையில் கேலோ இந்தியா நிகழ்வில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, புதுப்பொலிவு பெற்றுள்ள பொதிகை தொலைக்காட்சியை டிடி தமிழ் என்ற பெயரில் மக்களுக்கு அர்ப்பணிப்பார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பிரசார் பாரதி ஒளிபரப்பு நிறுவனம் சார்பில் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியை இன்று முதல் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இது குறித்து சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்சன் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்,
கேலோ இந்தியா நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது, புது வகையிலான டிடி தமிழ் தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பை தொடங்கி வைக்கின்றனர்.
டிடி தமிழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொழுதுபோக்கு, கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் டிடி தமிழில் ஒளிபரப்பப்படும். டிடி நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகம். மேலும், 12 இடங்களில் பண்பலை ஒலிபரப்பு கோபுரங்கள் இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளன.
எல்லைப்புற கிராமங்களுக்கும் அரசின் தகவல் ஒலிபரப்பு சேவைகள் கிடைக்கும் வகையில், ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசுத் திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேரவும், பாரதம் வளர்ச்சி பெறவும் தகவல் ஒலிபரப்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிடி தமிழில் பணியாளர் பற்றாக்குறை இருக்கிறது. ஆனாலும், தேவைக்கும் அதிகமான தொழில்நுட்பப் பணியாளர்கள் டிடி தமிழில் இருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு மாற்றுப் பணிகள் ஒதுக்கி, பணியாளர் பற்றாக்குறை போக்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்.
தமிழ் கலாச்சாரத்தை நேரில் பிரதிபலிக்கும் வகையில், டிடி தமிழ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.பொதிகை ஒரு பொறுப்புள்ள ஊடகம், மக்களின் எண்ணத்திற்கு ஏற்பவே அயோத்தி ராமர் கோயில் விழா குறித்த நேரலை ஒளிபரப்பு பொதிகையில் வழங்கப்படும்.
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற செய்திகள் வழங்கப்படும். அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதே தகவல் ஒலிபரப்புத் துறையின் நோக்கம்” எனத் தெரிவித்தார்.
