திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஜி.விஸ்வநாதன்(83) .இவர், நேற்று வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.
இவர் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். இவர் பணியில் இருந்தபோதே தான் இறந்த பிறகு தனது உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்க வேண்டி பதிவு செய்து இருந்தார்.
அதன்படி திங்கள்கிழமை இறந்த விஸ்வநாதனின் உடலை, அவரது விருப்பப்படி குடும்பத்தினரான வி.மரகதம், வி.ஜெயலட்சுமி, வி.கோபு, ஆகியோரின் சம்மதத்தோடு அவரது முழு உடல் இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.
கண்கள் தானம்:
இறந்த விஸ்வநாதனின் கண்களை காஞ்சிபுரம் சங்கரா கண் மருத்துவமனைக்கு நேற்று இரவு (திங்கள்கிழமை) செய்யாறு ரிவர்சிட்டி லயன் சங்கத்தின் உதவியோடு தானமாக வழங்கப்பட்டது.
இறந்த விஸ்வநாதனின் முழு உடல் மற்றும் கண்கள் தானம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை செய்யாறு ரிவர்சிட்டி லயன் சங்கத்தின் நிர்வாகிகள் கே.கோபிராஜ், ப.நடராஜன், தெய்வசிகாமணி, பரணிராஜன், கே.வெங்கடேசன், எஸ்.சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

