நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அன்று அவர் ஆஜராகவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஒரு சம்மன் அனுப்பி, வியாழக்கிழமை (இன்று) கோவையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அதனை ஏற்று, சயான் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். பயான் இடம் அறியப்படாத இரண்டாவது செல்போன் தொடர்பாக விசாரணையானது நடைபெற்று வருகிறது. தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணையின் முடிவில் இவ்வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.