பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாட்டின் ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தில் உள்ள 104 உறுப்பு கல்லூரிகள் மற்றும் நேரடியாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என 37,376 பேர் பட்டம் பெற தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 759 பேருக்கு ஆளுநர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். இதில் 650 பேர் ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெற்றனர்.இந்த நிலையில், 759 பேருக்கும் ஆளுநர் ரவி தனித்தனியாக பட்டங்களைவழங்கிக்கொண்டிருந்தார். வழக்கம் போல ஆளுநர் மேடை ஏறுவதற்கு முன்பே பட்டம் அடங்கிய ஃபைல் மாணவர்களின் கையில் வழங்கப்பட்டது.மேடைஏறி மாணவர்கள் அதை ஆளுநர் கையால் கொடுத்து வாங்கினர்.இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மாணவி ஒருவர் பட்டத்தை ஆளுநர் கையால் கொடுத்து வாங்காமல் அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரன் கையில் கொடுத்து வாங்கினார். ஆளுநர் அந்த மாணவியிடம் இருந்து பட்டத்தை வாங்க கைகளை நீட்டிய போது, அந்த மாணவி ஆளுநரை ரவியை கடந்து சென்று துணைவேந்தர் சந்திரசேகரனிடம் பட்டத்தை கொடுத்து வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆளுநர் ரவி அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரித்த போது அந்த மாணவி நாகர்கோவில் மாவட்டம் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவி ஜீன் ஜோசப் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், '' தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆளுநர் ரவி எதுவும் செய்யவில்லை. அந்த எண்ணத்தில் தான் இன்று ஆளுநர் கையால் பட்டம் வாங்க வேண்டாம் என முடிவு செய்தேன். மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதற்கு தகுதியான பலர் உள்ளனர். முதல்வர் இருக்கிறார், கல்வித் துறை அமைச்சர் இருக்கிறார்... ஏன் அவர்கள் கையால் பட்டம் வழங்கக் கூடாது? எனது இந்த செயலை இங்கிருந்த சக மாணவர்கள் பாராட்டினார்கள்.எல்லோரும் ஆளுநர் கையில் பட்டம் வாங்கினாலும், பட்டத்தை வாங்கும் உரிமை மாணவர்களுக்கு இருக்கிறது. அதை யாரிடம் வாங்க வேண்டும்? என நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பிற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் செய்தது தவறாக இருந்தால், யாரும் என்னை வாழ்த்தி இருக்க மாட்டார்கள். ஆனால், என்னை பலரும் வாழ்த்தினார்கள். மண், மொழி, இனம் காக்க மரியாதை தெரியாத ஒருவரிடம் இருந்து பட்டம் வாங்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன்'' என்று கூறினார்.
மாணவி ஜீன் ஜோசப் நாகர்கோவில் இந்து கல்லூரியில் பி.காம் முடித்து விட்டு சிவகாசியில் உள்ள மெப்கோ கல்லூரியில் எம்பிஏ பயின்றார். அதை தொடர்ந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மனிதவளத் துறையில் பிஎச்டி (முனைவர் பட்டம்) முடித்துள்ளார். இன்று முனைவர் பட்டம் வாங்கும் போது தான் அவர் ஆளுநரை புறக்கணித்தார்.ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் ரவி பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை பேசி வருவதால், அவருக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தொடர்ச்சியாக ஆளுநரை விமர்சித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் டாக்டர் பட்டம் பெற வந்த மாணவி ஆளுநரை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவியின் கணவர் ராஜன் திமுகவில் மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
