சென்னை: நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டுவதாக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் அமையும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!!

sen reporter
0

தமிழும், ஆங்கிலமும் என்ற இரு மொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கையாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்விக்கான "தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025" -ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்களை சந்திக்கின்ற ஒவ்வொரு முறையும், கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். கரோனா காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்த போதும், அந்தப் பெருந்தொற்றால் நம் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று “இல்லம் தேடிக் கல்வி” போன்ற முன்னெடுப்புகளை எடுத்து கல்வி வழங்கினோம். நாங்கள் உங்கள் (மாணவர்கள்) மீது வைத்த நம்பிக்கைக்கு பலன் தான், உங்களின் சாதனைகள்.


வேறு எந்த மாநிலத்திலும், மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பாராட்டு விழாக்களை நடத்துகிறார்களா? என்று தெரியவில்லை. அந்த வகையில், இது சிறப்பான தனித்துவமான விழா. திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கல்வி முடித்து, உயர்கல்வியில் சேர வேண்டும். இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களில், உயர் கல்வியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு. இந்த தேர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.


2022-ல் இருந்து கடந்த மூன்றாண்டுகளில், நம்முடைய அரசுப்பள்ளி மாணவர்களில், 977 பேருக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் எவ்வளவு தெரியுமா? 901. இன்னும் பல உயர்கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் முடியவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று நம்புகிறேன். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கடந்த 3 ஆண்டுகளாக ஐ.ஐ.டி.க்குள் ஒற்றை இலக்கில் நுழைந்து கொண்டிருந்த நம்முடைய மாணவர்கள், இந்த ஆண்டு 27 பேர் நுழைய உள்ளார்கள்.


குறிப்பிட்ட சில துறை என்று இல்லாமல் 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறையில், 901 அரசுப்பள்ளி மாணவர்கள் சேருகிறார்கள். இதில், 150 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள். இதனால்தான், அன்பில் மகேஸ் அடிக்கடி சொல்வார், “அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல! பெருமையின் அடையாளம்,” இந்தப் பெருமையை எங்களுக்குத் தேடித் தந்து, நெஞ்சை நிமிர்த்தி பேச வைத்திருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள்.


இந்த விழாவில், தமிழ்நாட்டின் மாநில பள்ளிக் கல்விக் கொள்கை 2025-ஐ வெளியிட்டது பெருமகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்கு என்று எல்லாவற்றிலும் ஒரு Unique Character இருக்கிறது. முற்போக்கான சிந்தனை இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து, எதிர்காலத்திற்கு தேவையான தொலைநோக்குப் பார்வையோடும் இந்த கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கிறோம்.


இந்த கல்விக் கொள்கை மூலமாக, படித்து, மனப்பாடம் செய்வதை விட, சிந்தித்து, கேள்வி கேட்கின்ற மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை வழங்க இருக்கிறோம். படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். கல்வியோடு உடற்பயிற்சியும் இணைக்கப்படும். தாய்மொழி தமிழ் நம்முடைய அடையாளமாக, பெருமிதமாக இருக்கும். முக்கியமாக, தமிழும் - ஆங்கிலமும் என்கிற இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கையாக இருக்கும். மீண்டும் சொல்கிறேன், இரு மொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை.


ஒவ்வொரு ஒன்றியத்திலும், புதிய 'மாதிரி வெற்றி பள்ளிகள்' அமைக்கப்படும். உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ என்ற நிலையை உருவாக்கும். மதிப்பெண்களாக இல்லாமல், மதிப்பீடுகளை நோக்கிய பயணமாகத் தேர்வு முறை அமையும். பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டுவதாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.


கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வர இருக்கிறோம். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி”! இதுதான், நம்முடைய திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை. பள்ளிகள் எல்லோருக்குமானது, அங்கு யாருக்கும் தடை இல்லை. தடுக்கப்படவும் விடமாட்டோம். யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது.


கல்வி பாகுபாட்டை நீக்குவோம். நீங்கள் விரும்புகின்ற கல்வியைப் பெறுவதற்கான வாசலை, நம்முடைய கல்விக் கொள்கை திறந்து வைக்கும். கல்வி சமத்துவத்தை உருவாக்குவோம். அறிவு கல்வியை அறிமுகம் செய்வோம். முக்கியமாக, அது பகுத்தறிவுக் கல்வியாக இருக்கும். அறிவியலுக்கு புறம்பான பிற்போக்குச் சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம். நம்முடைய மாணவர்கள் உலகளவில் போட்டி போட்டு, வெற்றி பெற இந்த மாநில கல்விக் கொள்கை துணையாக இருக்கும். மொத்தத்தில், கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றுவோம்.


கல்வி மூலமாக, எதிர்காலத்தில் நீங்கள் எல்லோரும் பெரிய பெரிய அதிகாரிகளாக, அரசியல் தலைவர்களாக, அறிவியலாளர்களாக, மருத்துவர்களாக, சட்ட அறிஞர்களாக, பொறியாளர்களாக, கலைஞர்களாக உருவாகி, உங்கள் வீட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுபோன்ற இன்னொரு மேடையில், உங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி, மற்றவர்களை ஊக்கப்படுத்தும் அளவுக்கு நீங்களும் உயர வேண்டும்” என வாழ்த்து கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top