தேனி:அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!!!!
8/10/2025
0
தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை ஊதியத்தைவிட குறைவான சம்பளத்தில் தான் பணிபுரிகிறோம். மேலும் தங்களுக்கு இ.எஸ்.ஐ போன்ற வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்று ஒப்பந்தப் பணியாளர்கள் வேதனையுடன்தெரிவிக்கின்றனர். அரசுமருத்துவக்கல்லூரிமருத்துவ மனை ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டதால் அவர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து சராசரியாக 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணிகள், மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு பிடித்தம் போக ரூ.12 ஆயிரத்து 500 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், இப்பணியாளர்கள் அனைவரும் வேறொரு முகவர் நிறுவனத்துக்கு (ஏஜென்சி) மாற்றப்பட்டனர். புதிய நிறுவன நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.15,000 ஆக சம்பளத்தை உயர்த்தி வழங்கியது. இந்நிலையில் இந்த மாதத்தில் இருந்து ரூ.12,500 சம்பளம் மட்டுமே ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த பணியாளர்கள் தனியார் ஏஜென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பழைய ஏஜென்சி நிர்வாகம் வழங்கி வந்த சம்பளத்தை தான் நாங்கள் வழங்குகிறோம் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட்டு வந்த . 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தபோராட்டத்தால் மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களிடம் மருத்துவமனை நிர்வாகமும், தனியார் ஏஜென்சி நிர்வாகமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.எங்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு எவ்வளவு சம்பளம், அதில் எவ்வளவு பிடித்தம் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மேலும் பிஎஃப், போனஸ் உள்ளிட்டவை அளிக்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும். அதுவரை போராட்டதை கைவிடமாட்டோம் என்று தெரிவித்தனர்.
