வேலூர்:வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்!!!
2/28/2026
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அதாவது இந்த கோயிலில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த ஆலயம் கி.பி.,6ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் கடந்த 21 ஆம் தேதி மாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேரோட்டமானது கோயிலை சுற்றி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீ சுப்பிரமணியரை பயபக்தியுடன் வழிபட்டனர். தங்களது வேண்டுதலை நிறைவேற்றக் கோரி உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை அந்த தேரின் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை வேண்டிக் கொண்டனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. அதாவது இரண்டாம் தேதி திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நிறைவு பெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை வள்ளி திருமணம் நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, ஆந்திரா, கர்நாடகா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபட்டனர். இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் விழா கமிட்டியினர், அறங்காவலர் குழு தலைவர் சாரதி மற்றும் கோயில் பணியாளர்கள் வெகு விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
