குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் பிணை பெற்று, பிணை நிபந்தனைகளை மீறி செயல்பட்ட மூன்று குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என்.. ஹரி கிரன் பிரசாத் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக குற்ற வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் நீதிமன்ற பிணையை பெற்று மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, நீதிமன்ற பிணை நிபந்தனைகளை பின்பற்றாமல் செயல்படும் குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவின் படி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் பிணை நிபந்தனைகளை மீறி செயல்படும் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் பிணையை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று 05-07-2023 ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பிணை நிபந்தனைகளை மீறி செயல்பட்ட மூன்று குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்து மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
.மாவட்ட காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை குற்றவாளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.