தூத்துக்குடி மையவாடியில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது தாயை அவதூறாக பேசியதால் தந்தையை பதினேழு வயது மகனே வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை (42), கட்டிட பணிகளில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி ராஜேஸ்வரி (38 ) இவர்களுக்கு நான்கு மகன் மற்றும் ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
தற்போது ஆறுமுகநேரி அருகே மூலக்கரை செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் இவர்கள் வசித்து வருகின்றனர், சின்னத்துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேஸ்வரி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.
இந்நிலையில் வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி பிள்ளைகள் காணாமல் இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்தார்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்துவிட்டு, மனைவி பிள்ளைகள் எங்கு சென்றனர் என்பது தெரியாததால் கோபத்தில் உச்சியில் சின்னத்துரை இருந்துள்ளார்.
அப்பகுதியில் தன்னுடைய 17 வயது மகன் மட்டும் இருந்ததை தொடர்ந்து அவனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு மீண்டும் தேடிச்சென்ற சின்னத்துரை தூத்துக்குடிக்கு வந்து, மையவாடியில் வைத்து மது அருந்தியுள்ளார்.
அதிகமான போதை ஏறிய நிலையில் மனைவியை மிகவும் தரக்குறைவாக அவதூறாக பேசி மகனையும் திட்டியுள்ளார், அதனைக் கேட்க சகிக்க முடியாத அவருடைய 17 வயது மூத்த மகன் அப்பாவிடம் இருந்த அரிவாளை எடுத்து ஆத்திரத்தில் தன் தந்தையையே சரமரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
எதிர்பாரத இச்சம்பவத்தால் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சின்னத்துரை சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சத்யராஜ் மேற்பார்வையில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னத்திரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சின்னத்துரையை கொன்றது அவரது மகன் தான் என தெரிந்ததையடுத்து, சின்னத்துரையின் 17 வயது மகனை பிடித்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
