வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ஏழுமலையான் கோயில் கட்ட அணைக்கட்டு எம்எல்ஏ ரூ. 50 லட்சம் நன்கொடை அளிப்பு.
வேலூர் திருப்பதி திருமலை தேவஸ்தான தகவல் மையத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதிய கற்கோயில் கட்டுவதற்காக அணைக்கட்டு எம்எல்ஏ ரூ. 50 லட்சம் நன்கொடையாக வழங்கினார். வேலூர் மாவட்ட திமுக செயலாளர், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ள ஏ.பி. நந்தகுமார் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2023 வரை இரண்டு ஆண்டுகள் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வந்தார். தற்போது திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெ. சேகரின் தீவிர முயற்சியால் வேலூரில் அமைந்துள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான தகவல் மையத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதிய கற்கோயில் அமைத்திட தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கோயில் கட்டுமான நிதியின் ஒரு பகுதியான ரூ. 1.25 கோடி தொகையை பக்தர்கள் மூலமாக நன்கொடையாக பெற்றிட தேவஸ்தானம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பக்தர்களிடம் பெறவேண்டிய ரூபாய் 1.25 கோடியில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமார் தனது சொந்த நிதியிலிருந்து புதிய கற்கோயில் அமைத்திட வேண்டி ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாவிடம் வழங்கினார். அப்போது திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஜே .சேகர் ரெட்டி உடன் இருந்தார்.
