தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மூன்று நாள்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் செல்வதற்கு முன்னதாக, தனது வீட்டுக்கு வருகைதந்த பிரமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, தேமுதிக நிர்வாகிகள் சுதிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்ட நிலையில், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பையும் தேமுதிக வெளியிடாமல் இருக்கின்றது. இதனிடையே, தேமுதிகாவுக்கு அதிமுக மாநிலங்களவை சீட் கொடுக்காததால் அதிருப்தியில் உள்ள பிரேமலதா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.