இதன் காரணமாக பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 12 சதவீதமாக இருந்த ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி, 5 சதவீதமாக குறைக்கப்படும் என கோவை தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில் ‘‘ஜாப் ஆர்டர் பெற்று வேலை செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் சிறு மற்றும் குறு தொழிற்கூடங்கள் தான். ஜாப் ஆர்டர்கள் மூலம் உற்பத்தி செய்து தரப்படும் பொருட்களுக்கு 60 முதல் 120 நாட்கள் வரை தாமதமாக தான் பணம் கிடைக்கும். தற்போதுள்ள 12 சதவீத ஜிஎஸ்டியே, ஜாப் ஆர்டர் வேலைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே ஜாப் ஆர்டர்கள் மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.தமிழ்நாட்டின் தொழில்துறை தலைநகரமாக உள்ள கோவை, 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்திற்குப் பிறகு சிறு, குறு தொழில்கள் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி முறை, தொழில்துறையை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவோருக்கு இது பெரும் சவாலாக மாறியது என்றும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
சிறு மற்றும் குறு தொழில்களின் (MSMEs) முக்கிய இடமாக கோவை உள்ளது. இதில் ஜாப் ஆர்டர் (Job Order) தொழில்கள் – அதாவது, இன்ஜினியரிங் பொருட்கள், இயந்திர உதிரி பாகங்கள், மோட்டார், பம்ப் செட் போன்றவற்றை சிறிய அளவில் தயாரிக்கும் தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. 2017-ல் இத்தகைய தொழில்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.ஜிஎஸ்டி உயர்வு குறித்து கோவை கொடிசியாவின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், ''பல்வேறு பொருள்களுக்கு விலக்கு அளித்து, ஜிஎஸ்டியை குறைத்து நடவடிக்கைகள் எடுத்தாலும், தொழில் துறை சார்ந்து இருக்கக் கூடிய ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினையை கவனிக்கவில்லை. ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதமாக இருக்கும் போது அதனை 5% ஆக குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், அதனை தற்போது 18 சதவீதமாக உயர்த்திவிட்டனர்.கோவையில் மட்டுமே ஜாப் ஆர்டர்களில் 50 ஆயிரம் தொழிற்கூடங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதைப் போல தமிழ்நாட்டில் பிற பகுதிகள் உட்பட இந்தியாவில் ஜாப் ஆர்டர் செய்யக் கூடிய தொழில் முனைவோர் லட்சக்கணக்கில் உள்ளனர். அதில் பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 12 சதவீத வரியையே சமாளிக்க முடியாத நிலையில், 18 சதவீத வரி மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.'உடனடியாக வரி குறைப்புசெய்யவேண்டும்'ஆட்டோ மேட்டிக், உதிரி பாகங்கள், ரயில்வே உதிரிபாகங்கள், மோட்டார், வெட் கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கு உற்பத்தியாளர்கள் மூலப்பொருள் தந்து அதனை டர்னிங் செய்து கொடுக்கும் பணியை செய்து கொடுக்கிறோம். அதனை ஒன்றாக சேர்த்து அவர்கள் பொருளாக மாற்றுகின்றனர். எங்களுக்குள் கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி அவசியமே இல்லை இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட தொழில்களை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும். ஒரு லட்சம் ரூபாய்க்கு வேலை (ஜாப் ஆர்டர்) செய்து கொடுத்தால், 18 ஆயிரம் ரூபாய் நாங்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். செய்த வேலைக்கு எங்களுக்கு மூன்று மாதம் கழித்து தான் பணம் வரும். அதற்குள் சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை வெளியே வட்டிக்கு கடன் வாங்கி ஜிஎஸ்டி கட்ட வேண்டிய சூழல் உள்ளது.
12%இருக்கும்போதேபலஆயிரக்கணக்கானதொழில்முனைவோர் நெருக்கடியால் தொழிலை விட்டு சென்று விட்டனர். தற்போது 18 சதவீதம் என்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். நிலையான தொழிலாக சிறு குறு தொழில்கள் இல்லாததால் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை. மின் கட்டணம், நிலை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் கடுமையான சவாலை சந்திக்கிறோம். ஏற்கெனவே கோவை மாவட்டம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், கோவையின் அடையாளமான இன்ஜினியரிங் தொழில்களை இழக்கும் நிலை உருவாகும்'' என்று வேதனையுடன் தெரிவித்தார்.இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ''தற்போது மாதத்திற்கு 20 நாட்கள் மட்டுமே வேலை இருக்கிறது. இந்த வரி உயர்வால் மேலும் வேலை இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை விட்டு மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டும். எங்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.பலலட்சம்தொழிலாளர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையை கோவை இழந்து விடும்'' என கண்ணீருடன் கூறினர்.
