கோயம்புத்தூர்:வெளிமாநிலங்களில் தனி வரி விதிப்பு தொடரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!!!
11/12/2025
0
ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் காரணமாக 4 நாட்களாக வாழ்வாதாரம் இழந்து இருப்பதாகவும், தமிழக முதல்வர் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோயம்புத்தூர் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.வெளிமாநிலங்களில் தனியாக வரி விதிக்கப்படுவதை கண்டித்து, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளி மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக இன்று கோயம்புத்தூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ”சாலை வரி தொடர்பாக வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தமிழ்நாடு அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசின் கவனத்திற்கு பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.கோயம்புத்தூரில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. வெளி மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாட்டில் வரி வசூல் செய்ய ஆரம்பித்ததால், பிற மாநிலங்களிலும் இதே போல தமிழ்நாடு பேருந்துகளுக்கு அந்தந்த மாநிலங்களில் வரி வசூல் செய்கின்றனர். கேரளாவிலும், கர்நாடாவிலும் லட்சக்கணக்கான ரூபாய் வரை வரி விதிக்கின்றனர். வடமாநிலங்களில் இது போன்ற பிரச்சனை இல்லை, இவ்வளவு தொகை வரி செலுத்தி எங்களால் வாகனம் இயக்க முடியாது.ஆம்னி பேருந்துகள் வேலைநிறுத்தம் துவங்கி நான்கு நாட்கள் ஆன நிலையில், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். கோயம்புத்தூரில் மட்டும் 3500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு அரசிடமிருந்து நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.அரசு நிறைய சலுகைகளை ஆம்னி பேருந்துகளுக்கு செய்துள்ளது. இந்த சாலை வரி பிரச்சினையையும் அரசு சரி செய்து கொடுக்க வேண்டும். நீதிமன்றம் சென்றால் உடனடியாக தீர்வு கிடைக்காது என்பதால் அரசிடம் கோரிக்கையாக வைக்கின்றோம்.அரசு நல்ல முடிவு சொல்லும் வரை பேருந்துகளை வெளி மாநிலங்களுக்கு இயக்கப்போவதில்லை. பண்டிகை காலத்தில் நிலையான கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஒரு சில பேருந்துகளில் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலித்து வரும் நிலையில், சங்கத்தின் மூலம் அதனை கட்டுப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
